Friday, December 27, 2013

இஸ்ஸ்கூல் போவோமா - பகுதி-1

முதல்தடவை போகும்போதே விளங்கிட்டோம்!!!???  இப்போ யென்னவாம் . . அது தானே  உங்க கேள்வி. . சங்கதில பதிவு படிக்கிற அளவுக்கு வெட்டியாதான இருக்குறீங்க . . .சும்மா வாங்க பாஸ். படிச்சவன் நம்ம நாட்டுல MLA, MPஆரானோ இல்லியோ கண்டிப்பா அவன் ஸ்கூல் காலேஜ் வைக்ணும். அது தானே கரெக்ட்டு..பின்ன எப்படி வளர்ச்சிப் ( யாரோட ? ? ) பணிகளுக்கும், நலச்சேவைகளுக்கும் ( இடியாப்பம் மாதிரி இருக்குமே . . . . அது இல்லங்க ) நிதி திரட்ட முடியும்.


மிகத்தரமான பள்ளிகள் என்றும், அறிவின் ஊற்று, 
குடம்,சொம்பு, என்றும் சோப்பு, சீப்பு,
பேஸ்ட் விளம்பரங்களுக்கு இணையாக தன்னை சந்தையிட்டு கொள்ளும் பள்ளிகள் ஒரு புறம். இன்னொரு புறம் JUNE மாதம் ஆரம்பிக்கும் பள்ளிகளுக்கு FEB மாதமே அட்மிஷன் முடிந்து விட்டது என்று வறட்டு மூடம் போட்டுக்கொள்ளும் பள்ளிகள் ஒருபுறம். கேட், வாட்ச்மன், காம்பவுண்டு   க்யூ, பட்டு புடவை வாங்க வந்தது போல் கூட்டம், அதே பட்டுப்புடவை விலையில் அப்பிளிகேஷன் என்று அனைத்தையும்  முடித்தபின்னும் முடிவதில்லை இந்த ஷங்கர் பட பட்ஜெட் பள்ளிகளின் ஜம்பங்கள் . . நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ? ? என்ற கேள்வி இந்த பெற்றோர்கள் சங்குக்குழியில் துடிப்பதை பார்த்திருக்கிறேன். அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை கூட இந்தக் கேள்விகள் சரி என்றாலும் "மறைக்கப்பட்ட தன் முதல் காதல்" போல் வைத்து கொள்கிறார்கள்.

பள்ளிகளில் நுழைவுத்தேர்வு

முன்னொரு காலத்தில், ஐந்து வயது நிரம்பியதர்கான சான்று கழுத்தை சுற்றி காதை தொடும் திறன் இருந்தால் போதும் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கலாம். ஆனால் இன்று மேற் கூறிய பட்டியலில் உள்ள பள்ளிகள் முதல், தம்படிக்கு பெறாத பள்ளிகள் வரை கச்சைக்கட்டிக் கொண்டு நுழைவுத்தேர்வு நடத்துகின்றன. அடுத்து, அந்த தேர்வின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் பள்ளியில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள்.இது தவிர, சேர்மேன், கவுன்சிலர்  போன்ற உயர்ந்த பதவி வகிப்பவர்களின்  கடிதம், வைட்டமின் M(தெரியாதவர்கள் சூது கவ்வும் பட காணா பாலா பாட்டை கேட்கவும் ) போன்ற அதிஜனநாயக முறைப்படியும் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. இதில் நமது கேள்வி, நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளுக்கான பள்ளி என்று ஏன் விளம்பரம் செய்ய வில்லை என்பதல்ல. ஒரு பணியமர்வுக்கு, தொழில்நுட்ப-படிப்பு, மருத்துவம் போன்ற சேர்க்கைகளில் நுழைவுத்தேர்வு அவசியம். அங்கே மதிநுட்பம், தகுதி போன்றவை கொண்டு  தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி ஒரு கட்டாயம் பள்ளிகளில் எதற்கு????இந்த கேள்விக்கு பல ஹார்வர்ட் மண்டைகளின் பதில் - The Tests are basically focussed to test on Basics of Lanuguage, mathematics and  Logic. ( இந்த தேர்வுகள், குழந்தைகளின் மொழி, கணிதம், மற்றும் சில அடிப்படைகளை சோதிக்க அமைக்கப்பட்டவை என்பதே இதன் அர்த்தம்) . அடிப்படைகள் கூட தெரியாத குழந்தைகளை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும் ? ?
தம்பி ஒரு சோடா ஒடப்பா என்னும் அளவுக்கு அருமையான பதில். . . அது நல்லவார்த்தை சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேங்குது . . . இந்த வலது கைய்ய இடது நெஞ்சுல வச்சமாதிரி ஒரு வார்த்தை சொல்லுவாங்கல்ல . . . சூப்பர்ங்க....... கரெக்டா கண்டுபுடிசீங்க . . மனசாட்சியே தான் . . உங்களுக்கு 10 பாய்ண்ட. 
இங்கு மதிப்பெண் அடிப்படையில் ஒரு குழந்தையை தேர்வு செய்யும் பொழுது - அந்தக் குழந்தை இயற்கையிலேயே தகுதி உடைய பிள்ளை அல்லது முன்னமே போதிக்கபட்ட பிள்ளை என்பது மறுக்க முடியாது. இந்த அடிப்படையில் ஒரு குழந்தையை சேர்த்து கொள்ளும் பொழுது அந்த பள்ளியோ, ஆசிரியரோ தனது பணியை எளிமையாக முடித்துக் கொள்ளலாம் ( நோகாம நோம்பு .. . . ஸ்டைல் ). ஆகையால்  இந்த பள்ளிகளின் தனித்தகுதி என்பது கேள்விகுறி ஆகிறது. ஒரு இயலை புரிந்துகொள்ளும் திறன், புரிந்ததை நினைவு படுத்தும் திறன், நினைவுகூர்ந்ததை சரியாக வெளிப்படுத்தும் ( எழுதும் ) திறன் இவை மூன்றையும்  அடிப்படையாக கொண்டது தான் கல்வி. இந்த மூன்று திறனும் வேறு வேறு கலவையில் குழந்தைகளிடம் இருக்கும். இந்த நுழைவுத்தேர்வுகள் இந்த மூன்று அடிப்படையை பரிசோதித்து, இந்த மூன்றும் முன்னமே ஒருங்கே பெற்ற குழந்தைகளை சேர்த்துக் கொள்கின்றன. அதாவது, இன்னும் சரியாய் சொன்னால் தன்னுடைய சுயஆதாயங்களுக்காக, பள்ளிகள் தன்னுடைய கடமையிலிருந்து விலகிக்கொள்கின்றன. அடுத்த கட்டமாக முன்னமே திறமையான குழந்தைகளை தேர்ச்சி பெறசெய்ததின் வெற்றியை தன் பெயரில் தம்பட்டம் அடித்து ஈன பிழைப்பு நடத்துகின்றன.

சச்சின் இயற்கயிலேயே நல்ல BATSMAN. அவரிடம் இருக்கும் திறமையை அவருடைய இளம் வயதிலேயே புரிந்து கொண்டு அவருக்கு பயிற்சியும் கொடுத்தார் ரமாகாந்த் அச்ரேகர். ஆனால் சச்சின் என்ற இந்திய விளையாட்டு வீரரின் வெற்றிக்குக் காரணம் அச்ரேகர் ஆகி விட முடியாது. கமல், மற்றும் ரஜினி போன்ற நடிகர்கள் தன்னுடைய குருநாதர் என்று உரக்கச் சொல்லும் பெயர் கே. பாலசந்தர் என்பதுதான். ஆயினும் இந்த இருவரின் திறமையை இணைசெய்யும் அளவிற்கு கே.பி`யின் திறமையும் உலகமரிந்ததே. ஆனால் இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளிலுமே கே.பியோ அச்ரேகரோ, கமலையும், சச்சினையும் தேர்வு செய்யாமலோ, பயிற்சி குடுக்காமலோ இருந்திருந்தால் அவர்கள் தன்னுடைய கடமையிலிருந்து தவறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். அப்படி அவர்கள் தேர்வோ/பயிற்சியோ கொடுக்காததால் சமுதாயத்துக்கு எந்த இழப்பு / நஷ்டம் இல்லை. ஆனால் பள்ளிகள் இதை செய்யும் பொழுது நேரடியாகவும், மறைமுகமாகவும் -  அந்த ( வாய்ப்பு மறுக்கப்பட்ட) குழந்தையின் நாளைய சமூகமும் , அந்த பெற்றோற்களின் இன்றைய சமூகமும் நேரடியான பாதிப்பிற்குள்ளாகின்றன. இன்னும் இந்த அவலத்தை உற்றுப்பார்கையில், மேற்கூறிய தகுதிகள் மிகக் குறைவாக உள்ள பிள்ளை - ஒரு அத்தியாவசிய மருத்துவ உதவி மறுக்க பட்ட, இன்னும் ஒருபடி மேலேபோய் அடிப்படை குடிமையில் உரிமைகள்(civil rights) மறுக்கப்பட்ட  நிலையெனலாம்.
பள்ளிக் கல்விகளை ஒருங்கு செய்யும் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் RTE ( Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009),சட்டமும் பள்ளிகளை தேர்வு அடிப்படையில் சேர்கை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்துகிறது.  

                                                                                                          . . . தொடரும். . . 

Thursday, July 18, 2013

வ(வா)லி. . . . . . .




இன்று எய்தவன் ராமனென்றால் கூட
அவன் கோதண்டத்தை முறி,
நேராகவே நின்று எய்திருந்தாலும்!

தமிழ்நாட்டிற்கு இல்லையென்றால்கூட
தமிழுக்கு இன்று கருப்பு தினம்;
இன்று மாலையோடு திரையின்
மொழி நிக்குருடாகியிருக்கும்;
நிழலின் மொழிகளுக்கு
நிறச்சாயம் நீ, ரங்கராஜா.. . .

 சுவாசம்   ஈடேறாமலா ?? - இருக்காது
நீ வரிகள் ஈடேறாமல்தான்
உடைந்திறுப்பாய்

இன்று இரவோடு உறங்கச்சென்ற
வார்த்தைப் பிள்ளைகள்
நாளைய கவிதை நலிந்த கதிரோடு எழுகையில்
உன்னைத் தேடி அழுமே!
என்ன சொல்லி ஆறுதல் செய்வேன்

அந்த தோட்டத்து வெற்றிலைகள்
முதல் முறையாய் நாளை அங்கு வாடியிருக்கும்
என்ன கொண்டு அவற்றை தேற்றுவேன்

இனி இங்கே எவனொருவன் காதலித்தாலும்
அவன் கவிதைகள் நிச்சயம் உன் ஜாடையில்தான் பிறக்கும்
இல்லையென்றால் அது இன்குபேட்டரில் தான் இருக்கும்
தமிழின் வினைத்தொகை நீ
மூன்று காலத் தமிழிழும் விரைந்திருக்கிறாய்


கவிதை செய்தாய், நாங்கள் காதலித்தோம்
காமம் ஈட்டினாய் கட்டுண்டு கிடந்தோம்
இப்படி போனாயே இப்போது என்ன செய்வது
உன் மொழியின் வயதை கருத்தில் கொண்டு
ஒப்பாரி செய்தால் நீ அற்பாயசில்தான் போயிருக்கிறாய்.

 நீ இசைந்ததுபோல்
தன்னுயிர் பிரிந்ததை பார்தவறில்லை
இன்னுயிர் பிரிந்ததை நானும் பார்த்து நின்றேனே. . . . . . .

Monday, July 8, 2013

சிங்கம்-2, திரைவிமர்சனம்


சின்னவயசுல உங்களுக்கு கழுதைப்பால் குடிக்க குடுதுருக்காங்களா???சூர்யாவுக்கு நெறையா குடுத்துருப்பாங்க போல. நல்லதுதான்!!


துரைசிங்கம் தன்னுடைய சென்னை பராக்ரமங்களை முடித்து விட்டு, தன்  சொந்த ஊரான நல்லூர் அருகே உள்ள பெருநகரான தூத்துக்குடி`யில் கரை ஒதுங்குகிறார். அங்கே தமிழக உள்துறை மந்திரியின் மேற்பார்வையில் பால்அண்டர்கவர் ஏஜென்ட்டாக ( அட அந்த ஏஜென்ட் இல்லீங்க, இது போலீஸ் உளவாளி  - 'அந்த ஏஜென்ட்' ) இருந்து கொண்டு ஒரு பள்ளியில் NCC வாத்தியாராக வேலை செய்கிறார். போலீஸ் வேலைய விட்டதுனால இவுங்க அப்பா காவ்யாவுக்கும் சிங்கத்துக்கும் நடக்கவிருந்த திருமணத்தை தள்ளிப்போடுகிறார்.  இந்த சினிமா அப்பனுகளுக்கே உள்ள திமிரு ( சினிமால மட்டுமா`ன்னு கேக்குறீங்களா??? ). 




அப்போ தூத்துக்குடியில் தன்ராஜ், பாய், சகாயம் -  மூவரும் மத நல்லிணக்கத்துடன் மிகப்புனிதமான போதைமருந்து தொழிலை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவன் டானி- எப்பவும் போல் ரூம்போடாமல் யோசிக்கும் வில்லன்; இவர்களை வேட்டையாட துரத்தும் சிங்கம். இதுகெடயில சிங்கம் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் அழகான மாணவி ஹன்சிகா. . . மாணவியா`வா??. ஏங்க தளபதி காலேஜ் போகலாம்.. . கனவுகன்னி ஸ்கூல் போகக்கூடாதா  ? ? ? . . . அதே பள்ளியில் பியூன் வேலை செய்யும் சந்தானம்..


மற்றபடி கழுத்துச்செயின் தெரிய ஓடி, சட்ட கிழிய, தொண்ட கிழிய சண்டைபோட்டு வில்லனை பிடிக்கும் நம்ம துரைசிங்கம். படத்தின் செகண்ட் ஹீரோதான் சூர்யா, முதல் ஹீரோ திரைக்கதையும் எடிட்டிங்க்கும்தான் ( V.T.விஜயன்) -அதிரடி. எப்பவும் போல் ஹரி மிகஅருமையாக இயக்கத்தையும் திரைக்கதையையும் கையாண்டுள்ளார். ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் படத்தின் சுழற்சியைகூட்டி, உச்சா கூட போக விடாமல் சீட்டில் கட்டிவிடுகிறார். அனுஷ்கா`விற்கு சொல்லும் அளவிற்கு ஒரு வேலையும் இல்லை. குடுத்த வேலையை அரை  திருப்தியுடன் செய்திருக்கிறார் DSP. ஒரு முழுநீ  சூர்யா ரசிகனுக்கும் க்ன் ரசிகனுக்கும் மூக்குபிடிக்க தீனி இந்த சிங்கம்-2.

உழைப்பே உயர்வு இதற்க்கு மிக நல்ல எடுத்துக்காட்டு ஹரி மற்றும் சூர்யா அவர்களின் சிங்கம்-2. கண்டிப்பா போய் பாக்குறீங்க ... ஓகே. ஹரி`யின் சூப்பர்ஹிட் சாமியும் - ஹிந்தி`யில் ரீமேக் கி - POLICEGIRI என்று  வெளியாகி உள்ளது என்பது துணுக்கு செய்தி.

Sunday, June 16, 2013

THE MAN of STEEL [ 3-D ] - திரைவிமர்சனம்

முப்பெரும் விழா மாதிரி, நான்கு படங்களுக்கு இசை வெளியீடு மாதிரி கொத்தா,"தீயா வேலை செய்யணும் குமாரு. . . , தில்லு முல்லு  -2, மற்றும் இந்த படம் மொத்தமாக முப்பெரும் திரைவிமர்சனம் ட்ரை பண்ணலாம் என்று முடிவுசெய்தேன் . . . . ஓசியில் டிக்கெட் வாங்கிக்கொடுத்து இந்த ஏழைக்கு அருள்செய்ய யாரும் கிடைக்காத சூழ்நிலையில் சொந்த செலவிலேயே(வேறு வழியில்லாமல்!!!) படத்துக்கு போக    முடிவு செய்தேன். .

2008 முதலே 'THE MAN of STEEL' இந்தப் படத்தின் இவன், இவை, இப்படிகளை ஆவலுடன் படித்து 2011இல் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்ததை தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த சுப்பர்மேன் பக்தர்களில் நானும் ஒருவன். அது மட்டுமல்லாது, இந்த படக்குழுவில் நோலனில் துவங்கி, மார்க் ஸ்ந்ய்டர், டேவிட் கொயர், ஹான்ஸ் சிம்மர், கெவின் கோஸ்ட்நேர் என்று அந்த பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போய் ரஸ்ஸல் க்ரோவ் என்ற பெயர் சேர்கையில் இந்தப் படத்திற்கான சுழற்சியை(எதிர்பார்ப்பை) ஒருபடி மேல் எடுத்துச் சென்றது. கடந்த  2012ன் இறுதியில் இருந்தே இந்த படம் - "வரும்ம்ம்ம் ஆனா வராது" என்பதுபோல் இருந்தது. 

கதை - ஜெர்ரிசிகேல் மற்றும் ஜோ ஷுஸ்ட்டர் இந்த SUPERMAN கதாபாத்திரத்தை 1933இல் படைத்தது முதலே ஒரே கதைதான். "க்ரிப்டன்" என்ற அழிவு நிலையில் உள்ள ஒரு கிரகம்  , அங்கு பிறக்கும் ஒரு குழந்தை, பூமிக்கு வந்து சேர்கிறது.அதிசக்தி கொண்ட அந்தக்குழந்தை- வளரும் பொழுது, வளர்ந்த பின் - பேண்ட்க்கு வெளில சிவப்பு ஜட்டி போட்டுகினு சுத்தி சுத்தி - பறந்து பறந்து தனது சக்தியை பயன் படுத்தி பூமியை பலவிதமான தீய சக்திகளில் இருந்து காப்பாற்றுவதுதான், இதன் கதை. பெருவாரியாக, ஒவ்வொவொரு பதிவிலும், வில்லன்களும் அவர்களின் சக்திகளும்தான் வேறுவேறு.  யாரு பெத்த பிள்ளையோ நமக்காண்டி உசுரகொடுத்து சண்டை போடுது என்று SUPERMAN எப்பவும்போல், வேற ஹோட்டல் ஆனாலும் அதே இட்லி அதே சட்னி கதைதான்.இந்தப் படத்திலும் அதேதான்.ஆனால் சிவப்பு ஜட்டி இல்லை. ஜட்டி ஒரு மேட்டரா என்று கேட்பவர்கள் இந்த பதிவை முதலில் படிக்க.

வார்னெர்-ப்ரோஸ் தயாரிப்பில், ச்ன்ய்ட்டெர் இயக்கத்தில் வெளியாகி மேற்கூறிய பெயர்களாலும் பெரிய எதிர்பார்ப்போட வெளிவந்த இந்த திரைப்படம் அதிதிருப்தியும் இல்லை வெற்றியும் இல்லை.முழு ஆண்டு பள்ளி விடுமுறையின் இறுதியில் வெளியாகி இருந்தாலும், இந்தப் படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படவில்லை.ஒரு தீவிர superman ரசிகனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப் பட்டிருகிறது. மற்ற superman படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த superman படத்தில் - திரைக்கதையிலும், காட்சிகளிலும் ஒரு வறட்சி தெரிகிறது.அமீர் மொக்ரி`யின் இணையற்ற ஒளிப்பதிவில் உள்ள ஆக்கம் டேவிட் ப்றேன்நேர்`றின் வெட்டிங்கிலும் ( எடிட்டிங்க்கு தமிழ்பா ! ! ! ! ), வரைகலையிலும்(GRAPHICS) இல்லை. இஸ்ஸ்கூல் பசங்கபோல், சத்யம் தேட்டரில், Flooring கலர் முதல் ஊழியர்களுக்கான சீருடைகலர் வரை அனைத்தையும் காப்பி அடிக்கும்காமல் சொந்தமாகவே குறைந்த செலவில்செய்யும் சங்கம் தேட்டரின் ஸ்பீக்கர், ஜிம்மர்`இன் இசை+இரைச்சல் சங்கமம்  - தலைவலிடா சாமி. SUPERMANநின் MAN-பகுதி அதாவது CALRKE-KENT மிக அருமையாக யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி ஒன்றுதான் நெஞ்சுக்கு நிம்மதி - யாருக்கு ? ? ? யாருக்கோ ! ! ! ! ! !
 

THE MAN of STEEL உயர உயர பறந்தாலும் SUPERMAN ( பழைய படங்கள் )ஆக முடியல

THE MAN of STEEL என்பது உண்மையில் தலைவர் STALINநை குறிக்கும் என்ற குருந்தகவலோடு ஜூட் விடுகிறேன்.

Saturday, June 1, 2013

குட்டிப்புலி திரைப்படம் விமர்சனம்

அய்யா ஹீரோ வந்தாச்சா ? . . . . .,
ஹீரோயணி வந்தாச்சா ? ?. . . . . . , மேக்-அப் மேன் வந்தாச்சா ? ? . . ,
ஹீரோயணியோட அம்மா வந்தாச்சா ? ? . . . . . . ., ஓகே.! ! !

சொம்பு, ஆலமரம், அருவா, பெருசுங்க, பொட்டு பொடுசுங்க, அம்மணி அம்மா, அம்மன் கோவில், திருவிழா செட்டிங், தாலி, ஜிம் பாய்ஸ், ரெடியாப்ப ??? ஓகே ஸ்டார்ட், ஆக்ஸ்ஷன், கேமரா ரோல்லிங், இப்படி ஒரு படம் எடுத்த எப்புடி இருக்கும் ? ? ? ஒரே குஷ்டமா இருக்கும். . . .

ஒரு அடாவடிப் அராத்து பேர்வழி, அவனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும்- ஏழ்மையில் உழழும் தாய், அவனுடைய வீரசாகசங்களில் தன்னை இழந்து, பாப்-கார்ன், டீ, காபிக்கு கொஞ்சம் முன்னாடி அவனையே காதலிக்க முடிவு செய்யும் அழகான பெண் போன்ற நூறு வருட சினிமாவில் சொல்லப்படாத மிகப்புதிய கதாபாத்திரங்கள்தான் - குட்டிப்புலி`யின் முக்கிய கதாபாத்திரங்கள் ( தலைலேந்து கை எடுங்க பாஸ் - வீட்டுக்கு ஆகாது ). அதெப்படி இந்த பொண்ணுங்க தேடிடிடிடிடிடிடிடிப் போய் ஒரு பொரம்போக்க காதலிக்கிறாங்களோ புரியலங்க.

               ஒரு முதல் படம் என்ற தரத்தில், முத்தையா தன்னுடைய பணியை நன்றாகவே செய்துள்ளார். வாழ்த்துக்கள். சில இடங்களில் பெண்மை, தாய்மை, தாலி, போன்ற தமிழ் சினிமாவின் புராதான சின்னங்களை போற்றிப் புகழ்ந்து, கைதட்டல் வாங்க முயற்சித்திருக்கிறார் ( அப்பா ஒரு டீ சொல்லு ). மிக நாட்களுக்குப் பிறகு சினிமாவில் சிலம்பச்சண்டை பார்க்க மகிழ்ச்சி. ஆனாலும் அந்த சண்டை காட்சியில் பயன் படுத்திய யுக்திகள் பெரும்பாலும் 'களரி'பயிட்டு ( ரௌத்ரம் பழகு படத்துல ஜீவா பயிற்சி எடுப்பாரே - அதான் ) முறையை சார்தவை என்பது ஏமாற்றமே.
              தாட்டியரு பாட்டிலும், அருவக்காரன் பாட்டிலும், வரிகளில் நீண்டநாட்களுக்குப் பிறகு வைரமுத்து தெரிக்கிறார். முதல் படமான - வாகை சூட வாவில் கலக்கிய ஜிப்ரன், இந்த படத்தில் ஜஸ்ட் பாஸ்.
கும்கி`யிலும், சுந்தரபாண்டியனி`லும், லக்ஷ்மி மேனன் அழகில் மயங்கி, இந்தப் படத்தை பார்க்க போநீர்கலேயானால், ஒபெனிங்க் காட்சியிலேயே உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீனைகளுக்கும், தாமரைகளுக்கும், லக்ஷ்மி மெனொனுக்கும்  உவமப்படும்  - அந்த அழகு இந்தப் படத்தில் . . ஜூம் ஜக்கம்மா .. காணவில்லை .... ( ஒரே பீலிங்க்ஸ் மா) ஆமா லக்ஷ்மி-குட்டியோடரிசல்ட் என்ன பாஸ் ஆச்சு???

சர்ர்ரி.... படத்தின் கதை என்ன ? ?, இயக்குனர் அங்கிள் இந்த படைப்பின் மூலமாக தாங்கள் கூற விழையும் பொருள் என்ன?. இப்டி மதுரை தமிழ் சங்கத்துல புல் மில்ஸ் சாப்ட்டு, வெள்ளை தாடி வச்சுகின்னு -  நக்கீரர் மாதிரி கேள்வி கேக்க கூடாது .. இருந்தா சொல்ல மாட்டோமா ? ?

சசிகுமார்தான் ஹீரோ என்றாலும் பல இடங்களில் நமக்கு நம்மையும் மீறி தெரிவதென்னவோ தனுஷ்தான் ( நோ, 3-D கண்ணாடி தேவைப்படாது ).

ஆமாம் - பஞ்ச்லைன் சொல்லியே ஆகணும்ல - குட்டிபுலி - இன்னும் வளரனும்...

*  +  *  +  *  +  *  +  *  +  *  +  * +  * + * + * + * + * + * + * +  * + * + * + * + * + * + *

நாடி, நரம்பு, ரத்தம், சதை முழுசும் அனுஅனுவா சினிமா ஊறிப்போன ஒரு ரசிகன் என்ற முறையில் இந்தப் பதிவின் இரண்டாவது பகுதி.

முன்பெல்லாம் கிராமங்களின் பக்கம் சினிமாவின் காமெராக்கள் திரும்பும் பொழுது யதார்த்தமான மக்கள், அங்குள்ள வாழ்கை, மேலோட்டமாக அவர்களின் பிரச்சனைகளை, இந்த ஒளியும் ஒலியும் தேடியிருகின்றன, பதிவு செய்திருக்கின்றன. மிக சில படங்களே இந்த கட்டமைப்பை கடந்து மனிதம் தேடியிருக்கின்றன, தனது கடமையை நிறைவேற்றி இருக்கின்றன. வாகை சூட வா, வேதம் புதிது, அழகர்சாமியின் குதிரை, பரதேசி, மிருகம் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். ஆனால் கடைசிப் பத்தாண்டுகளின் சாபமா என்பது புரியவில்லை, இந்த கடைசி பத்தாண்டு சினிமாவின் கேமரா பலமுறை கிராமங்களின் பக்கம் திரும்பும் போது பல முயற்சிகள் லும்பர்களை வானுயரப் புகழும் போக்கை யதார்த்த படுத்தி கொண்டுவிட்டது. இது வருத்தம் என்பது தவிர இது எனக்கே சொந்தமான பயமாக கூடயிருக்கலாம்.
அண்மைய மராட்டிய திரைப்படங்கள் மற்றும் மலையாலம் மொழி படங்கள் இதில் நமக்கு முன்னோடி, சில ஹிந்தி திரைப்படங்களும் உண்டு.
காப்ரிச்ச பாஉஷ்  - மராட்டி - Gabricha Paus - விவசாயிகளின் நீர் பிரச்சனை, கடன் மற்றும் மின்சாரபற்றாகுறையைப் பற்றி ஹாசியத்துடன் பேசிய படம். பீப்லி லைவ் - ஹிந்தி Peepli Live, மற்று க பிஜ்லி க மன்டோலா - ஹிந்தி - Matru ka Bijili ka Mandola, அதாமிண்ட மகன் அபூ - மலையாலம், அச்சன்உரங்காத்த வீடு - மலையாலம் எனக்கு பிடித்த சிலவை.
கருத்து கசாயம் ஒன்னும் இல்ல. . . நான் சொல்லிதான் புரியணும்னா அதுவும் கஷ்டம். . . .
காமேரக்களுக்கு ஒரு வேண்டுகோள், வெட்டருவா, வேல்கம்பு, வீரம், தாய்மை, தாலி, பஞ்சாயத்து, பனைமரம், காதல் இவற்றை தாண்டி தமிழக மற்றும் இந்திய கிராமங்களில் பேசப்படாத சோகமும், நெகிழ்ச்சியும், மனிதமும், மனிதனும் மண்டி கிடக்கிறது. அவை மாண்டு போவதற்கு முன் தீர்வு தேடவில்லை என்றாலும் பரவா இல்லை, பதிவாவது செய்து கொள்வோம்.


ஆங்கிலத்தில் படிக்க - http://hemloc.blogspot.in/2013/06/kuttip-puli-movie-review.html